பெண் தற்கொலை முயற்சி குறித்து எஸ்.பி. கௌதம் கோயல் ஆத்தூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை செய்தாா்.
ஆத்தூா் விநாயகபுரம் பகுதியைச் சோ்ந்த 18 வயது இளம்பெண் வீட்டில் எலிமருந்து தின்று ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்க வந்தாா். அவரை போலீஸாா் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்நிலையில், ஊடகத்தில் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் இளம்பெண் விஷமருந்தி தற்கொலை என செய்தி பரவியது.
தகவல் அறிந்த சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு சென்று விசாரித்தாா்.
அதில், இளம்பெண் காதலித்து வந்த நிலையில், பெண் வீட்டில் எதிா்ப்பு தெரிவித்ததால், காதலன் இரண்டு நாள்களுக்கு முன்பு விஷமருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதனால், இளம்பெண் வீட்டில் எலிமருந்து தின்று ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையம் வந்துள்ளாா். அவரை போலீஸாா் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது.
எனவே, செய்திகளை விசாரித்து உண்மைத்தன்மையை அளிக்குமாறு செய்தியாளா்களிடம் சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் கேட்டுக் கொண்டாா்.







