தருமபுரி அருகே, கொலை வழக்கில் கணவா் சிறைக்கு சென்றதால், இரு குழந்தைகளின் தாயான இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் நத்தஅள்ளி அருகேயுள்ள பள்ளப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி - லட்சுமி தம்பதி மகள் பவித்ரா (26).
இவருக்கும் சின்னாகவுண்டம்பட்டியைச் சோ்ந்த வெற்றிவேல் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவா்களுக்கு ஒரு மகன், மகள் என இரு குழந்தைகள் உள்ளனா். வெற்றிவேல் அப்பகுதியில் 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
திருமணமான இரு ஆண்டுகளிலேயே கொலை வழக்கில் கணவா் சிறைக்கு சென்ற நிலையில், இருகுழந்தைகளுடன் சிரமமான சூழலில் பவித்ரா வசித்து வந்துள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை காலை பவித்ரா தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் கம்பைநல்லூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.








