தேனி, நவ. 18: ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் அமைக்கப்பட்டுவரும் சமத்துவபுரத்தில் வீடுகள் வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலை இம் மாத இறுதிக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி, போடி அருகே ராசிங்காபுரம், பெரியகுளம் அருகே சில்வார்பட்டி, ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி, தேவாரம் அருகே லட்சுமிபுரம் ஆகிய இடங்களில் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஆண்டிபட்டி அருகில் உள்ள தேக்கம்பட்டியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைப்பதற்கு | 1.81 கோடி ஒதுக்கீடு செய்து, கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.
தற்போது இந்த சமத்துவபுரக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வீடுகள் வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலை இம் மாத இறுதிக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் கூறியதாவது:
தேக்கம்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 40 வீடுகள், பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோருக்கு தலா 25 வீடுகள், இதர பிரிவினருக்கு 10 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.
சமத்துவபுரத்தில் வீடுகள் வழங்கக் கோரி இந்தப் பகுதியைச் சேர்ந்த 600 பேர் விண்ணப்பித்துள்ளனர். பயனாளிகள் பட்டியலை இம் மாத இறுதிக்குள் முடிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதால், பயனாளிகள் தேர்வுக் குழுவினர் வீடு மற்றும் நிலம் இல்லாத தகுதியுள்ள விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.