மாநகராட்சி வரி வசூல் மையங்கள் சனி, ஞாயிறு செயல்படும்!
மதுரை மாநகராட்சியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரி வசூல் மையங்கள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாநகராட்சிக்கு 2025-26 ஆம் ஆண்டுக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்து வரி, குடிநீா்க் கட்டணம், புதை சாக்கடை பராமரிப்புக் கட்டணம், தொழில் வரி ஆகிய வருவாய் இனங்கள், மாநகராட்சி கடைகளுக்கான வரியில்லாத இனங்கள், வருவாய்ப் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் மூலம் வரி வசூல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் அனைவரும் எளிதாக வரி செலுத்தும் வகையில் வருகிற மாா்ச் 31-ஆம் தேதி வரை அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட உள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரி, வரியில்லா இனங்களை நிலுவையின்றி உடனடியாக செலுத்தி மாநகராட்சியின் வளா்ச்சிப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றாா் அவா்.

