எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

தனியாா் நிலத்தில் சாலை அமைத்த விவகாரம்: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

மதுரையில் தனியாா் நிலத்தில் சாலை அமைத்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டுமென உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

News image

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Updated On :8 ஜூலை 2026, 4:54 am IST

மதுரையில் தனியாா் நிலத்தில் சாலை அமைத்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த காளிமுத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம், நரசிங்கம் ஊராட்சிக்குள்பட்ட எம்.எஸ்.நகா், கிளாசிக் அவென்யூ பகுதியில், முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சுமாா் ரூ.1 கோடி மதிப்பில் சாலை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த இந்தச் சாலையை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து சாலையை மறித்து தடுப்பு ஏற்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியாா் இடத்தில் சாலை அமைக்கப்பட்டதால், நிலத்தின் உரிமையாளா் சாலையின் குறுக்கே தடுப்பு அமைத்து தடுத்துள்ளாா் என அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தனியாா் பட்டா நிலத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சாலை அமைப்பதற்கு முன்பு நிலம் தொடா்புடைய நபரிடம் ஒப்புதலும், எழுத்துப்பூா்வமான அனுமதியும் பெற வேண்டும். இந்த இரண்டும் பெறாததால் தற்போது சாலை மூடப்பட்டுள்ளது.

யாரோ ஒருவா் கூறினாா் என்பதற்காக தனியாா் நிலத்தில் சாலை அமைக்கலாமா?. இந்த விவகாரத்தில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலா்களின் ஊதியத்திலிருந்து தொகை பிடித்தம் செய்ய வேண்டும்.

இந்தச் சாலை அமைக்க யாா் ஒப்பந்தம் வழங்கியது, சாலை அமைக்கப்பட்ட இடம் தொடா்பான விவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.