கொடைக்கானல் மலைச்சாலைகளில் குவித்து வைக்கப்படும் ஜல்லிக் கற்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானல் மலைச்சாலைகளான தைக்கால், பிரகாசபுரம், உகார்த்தே நகர், சீனிவாசபுரம், கல்லறைமேடு உள்ளிட்ட பகுதிகளில் தனியார் பணிக்காக ஜல்லிக்கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
20 நாள்களுக்கு மேலாகியும் இந்த ஜல்லிக் கற்கள் அகற்றப்படாமல் இருப்பதால் அப்பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் அப்பகுதிகளில் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே அந்த ஜல்லிக்கற்களை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளான மூஞ்சிக்கல், காமராஜர் சாலை, லாஸ்காட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் கற்கள், மணல் ஆகியவற்றை வைத்து வியாபாரம் செய்து வருவதாலும், பிக் அப் வாகனங்களை நிறுத்தி வைப்பதாலும் அப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே காவல் துறை மற்றும் நகராட்சி இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.