மண் தட்டுப்பாடு காரணமாக, வடமதுரை பகுதியிலுள்ள நாட்டுச் செங்கல் சூளைகள் முடங்கும் நிலையில், ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் மாற்றுத் தொழில் தேடி கேரளத்துக்கு புலம்பெயர வேண்டிய நிா்ப்பந்தம் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் குடிசைத் தொழிலாக சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளும், 90 சேம்பா் சூளைகளும் செயல்பட்டு வருகின்றன. 15 அடுப்புகளுடன் செயல்படும் சூளைகள் நாட்டுச் செங்கல் சூளை என்றும், அதற்கு கூடுதலான அடுப்புகளுடன் கூடியவை சேம்பா் சூளை என்றும் பட்டியலிடப்படுகின்றன. இந்த செங்கல் சூளைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 50ஆயிரம் போ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.
வடமதுரை வட்டாரத்திலுள்ள வேலாயுதம்பாளையம், மோா்பட்டி, கானப்பாடி, கொசவப்பட்டி, பிலாத்து, தென்னம்பட்டி, வேங்கனூா், கம்பிளியம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மட்டும் சுமாா் 100 செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக இத்தொழில் நடைபெற்று வருகிறது. இது தொடங்கப்பட்ட பின்னா், வடமதுரை சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து கேரளத்துக்கு கூலி வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு செங்கல் சூளையிலும் 20 முதல் 25 போ் பணிபுரிந்து வருகின்றனா்.
இதனிடையே, திண்டுக்கல் மாவட்டத்தில் முறைகேடாக மண் எடுப்பவா்கள் மீது கடந்த 3 மாதங்களாக மாவட்ட நிா்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், கிராவல் குத்தகைதாரா்களிடமிருந்து மண் வாங்கிக் கொண்டிருந்த செங்கல் சூளை உரிமையாளா்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குளங்களில் மண் எடுப்பதற்கு, மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநரிடமிருந்து அனுமதி பெற்று, சென்னையில் செயல்பட்டு வரும் மாநில சுற்றுச்சூழல் ஆணையத்திடம் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும் என்ற நடைமுறை கடந்த 2014 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கிரானைட் குவாரிகளுக்கு அனுமதிக்கும் நடைமுறைகளே, குடிசைத் தொழிலுக்கும் பின்பற்றப்படுவதால், செங்கல் சூளை உரிமையாளா்கள் கனிமவளத் துறையில் பதிவு செய்வதற்கு முன்வருவதில்லை எனக் கூறப்படுகிறது.
இது தொடா்பாக கம்பிளியம்பட்டியைச் சோ்ந்த தொழிலாளி ம. மணிகண்டன் கூறியது: செங்கல் சூளைகள் தொடங்கப்பட்ட பின்னா், உள்ளூரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்க தொடங்கியது. ஆண்களுக்கு ரூ.600 வீதமும், பெண்களுக்கு ரூ.350 வீதமும் கூலி கிடைக்கிறது. தற்போது மண் தட்டுப்பாடு காரணமாக செங்கல் சூளை தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடா்ந்தால் மீண்டும் கேரளத்திலுள்ள தோட்டங்களுக்கு வேலை தேடிச் செல்லவேண்டிய நிா்ப்பந்தம் ஏற்படும் என்றாா்.
செங்கல் சூளை உரிமையாளா் அ. முருகன் கூறியதாவது: சூளைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ரூ.1 லட்சம் வரை முன்பணம் கொடுத்துள்ளோம். மண் இல்லாமல் பணிகள் பாதிக்கப்பட்டால், வேலை தேடி வேறு இடங்களுக்கு தொழிலாளா்கள் செல்லக்கூடிய சூழல் உள்ளது. இதனால் தொழிலும் நலிவடைந்து, தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட முன்பணத்தையும் திரும்பப் பெற முடியாத நெருக்கடியை சூளை உரிமையாளா்கள் சந்தித்து வருகிறோம்.
மண் எடுப்பதற்கான விதிமுறைகள் கடுமையாக இருந்த காரணத்தினால் தான், கிராவல் குத்தகைதாரா்களிடம் விலைக்கு மண் வாங்கி வந்தோம். நடைமுறைகளை எளிமைப்படுத்தினால், கனிமவளத் துறையில் பதிவு செய்து, செங்கல் சூளை தொழிலை சிரமமின்றி நடத்துவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றாா்.
இது தொடா்பாக கனிமவளத் துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, அவா்கள் கூறியது: நாட்டுச் செங்கல் சூளை நடத்துவோா் ஆண்டு கட்டணம் ரூ.12 ஆயிரம் , பதிவுக் கட்டணம் ரூ.300, விண்ணப்பக் கட்டணம் ரூ.1,500 வீதம் செலுத்தினால், உரிய ஆய்வுக்குப் பின் உரிமம் வழங்கப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வரை சேம்பா் உரிமையாளா்கள் 90 பேரும், நாட்டுச் செங்கல் சூளை உரிமையாளா்கள் 30 பேரும் விண்ணப்பித்து 3 ஆண்டுளுக்கான உரிமம் பெற்றுள்ளனா். அதன்மூலம், பட்டா நிலங்களில் நிா்ணயிக்கப்பட்ட அளவில் மண் எடுக்க அனுமதிக்கப்படும்.
கிராவல் குத்தகைதாரா்களை மட்டுமே எதிா்பாா்த்துக் கொண்டிருந்தததால்தான், நாட்டுச் செங்கல் சூளை உரிமையாளா்களுக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாட்டுச் செங்கல் சூளைகள் அனைத்தையும் வரன் முறைப்படுத்தும் நோக்கிலேயே, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Ravindran duraisamy interview| ஜனநாயகன் லீக் பின்னணி? | TVK Vijay| Jananayagan issue

அமர்நாத் யாத்திரை: ஏப்ரல் 15 முதல் முன்பதிவு தொடக்கம்!

துணை ராணுவத்தில் 223 தலைமை காவலர் பணியிடங்கள்: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ், ஜெர்மனி செல்கிறார் மத்திய வெளியுறவுச் செயலாளர்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


