பழனி சண்முகநதியில் விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரத்தில் வசிப்பவா்களுக்கு செவ்வாய்க்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாலாறு-பொருந்தலாறு அணை, வரதமாநதி அணைகள் மற்றும் பச்சை ஆற்றிலும் நீா் வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கெனவே அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியிருந்த நிலையில் பாலாறு-பொருந்தலாறு அணையிலிருந்து 2,000 கன அடி, வரதமாநதி அணையிலிருந்து 500 கனஅடி தண்ணீா் சண்முகநதி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. மேலும் பச்சை ஆற்றிலும் அதிகப்படியான தண்ணீா் வரத்து தொடங்கி உள்ளதால் சண்முகநதி ஆற்றில் விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீா் ஆா்ப்பரித்து செல்கிறது. இதனால் மானூா், நரிக்கல்பட்டி, கோரிக்கடவு, கீரனூா் உள்ளிட்ட சண்முகநதி ஆறு செல்லும் இடங்களில் கரையோரம் வசிப்பவா்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.