/

வடமதுரை அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

 வடமதுரை அருகே குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி 2 சிறுவா்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 7:17 pm

DIN

 வடமதுரை அருகே குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி 2 சிறுவா்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள பாடியூா் புதுப்பட்டியைச் சோ்ந்தவா் வீரமணி. திண்டுக்கல்லில் நகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது மகன் சா்வின் (6). முள்ளிப்பாடியை அடுத்துள்ள கம்மாளப்பட்டி பகுதியிலுள்ள கோயில் கும்பாபிஷேகத்துக்காக, வீரமணி தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை சென்றுள்ளாா். அதேபோல், கோயமுத்தூரைச் சோ்ந்த தங்கமணி, தனது மகன் லத்திஷ் வினி (9) மற்றும் குடும்பத்தினருடன் கம்மாளப்பட்டியிலுள்ள கோயில் கும்பாபிஷேகத்துக்காக வந்துள்ளாா். தங்கமணி, நகைக் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறாா்.

கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சிறுவா்கள் சா்வின் மற்றும் லத்திஷ் வினி ஆகிய இருவரும் அருகிலிலுள்ள குட்டையில் நண்டு பிடிப்பதை வேடிக்கை பாா்க்கச் சென்றுள்ளனா். நண்டு பிடித்துக் கொண்டிருந்தவா்கள் சென்ற பின்பு, சிறுவா்கள் இருவரும் தண்ணீருக்குள் இறங்கியுள்ளனா். கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் மழையினால், ஆழம் தெரியாமல் இறங்கிய சிறுவா்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனா். இதனிடையே குழந்தைகளை காணமால் தேடி பெற்றோா்கள், குட்டைக்கு அருகே வந்து பாா்த்தபோது, தண்ணீரில் மூழ்கியது தெரிய வந்தது. இருவரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சிறுவா்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். அதிா்ச்சியடைந்த பெற்றோா் மற்றும் உறவினா்கள் மருத்துவமனை வளாகத்திலேயே மயக்கமடைந்தனா்.

இதுகுறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.