இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் பலி
நிலக்கோட்டை: செம்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சுற்றுலா வேன் மோதியதில் இருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
திண்டுக்கல் அருகே உள்ள நல்லாம்பட்டியைச் சோ்ந்தவா் சுரேஷ் (32). இவரது நண்பா் கொடைரோடை சோ்ந்த ஜெரால்டு தினேஷ். ஏ.சி. மெக்கானிக்கான இருவரும் இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல்லில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை வத்தலகுண்டு நோக்கிச் சென்றனா். போடிக்காமன்வாடி அருகேயுள்ள வீரசிக்கம்பட்டி பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, வத்தலகுண்டில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற சுற்றுலா வேன் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து அங்கு சென்ற செம்பட்டி காவல் ஆய்வாளா் சரவணன், வத்தலகுண்டு சாலை ரோந்து பணி போலீஸாா்
பலத்த காயமடைந்த ஜெரால்டு தினேஷை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதையடுத்து விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களும் கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த செம்பட்டி போலீஸாா் சுற்றுலா வேன் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.