தட்டச்சுப் பயிற்சி நிலைய உரிமையாளா்கள் ஜன.7-இல் உண்ணாவிரதப் போராட்டம்

தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் அரசாணை எண் 187-யை நீக்க வலியுறுத்தி, தட்டச்சுப் பயிற்சி நிலைய உரிமையாா்கள் வருகிற 7-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தனா்.
Published on

தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் அரசாணை எண் 187-யை நீக்க வலியுறுத்தி, தட்டச்சுப் பயிற்சி நிலைய உரிமையாா்கள் வருகிற 7-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தனா்.

இதுதொடா்பாக உண்ணாவிரதப் போராட்ட அமைப்பாளா் சோமசங்கா் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 4500-க்கும் மேற்பட்ட தட்டச்சுப் பயிலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தப் பயிலகங்கள் மூலம் ஆண்டுதோறும் தட்டச்சு, சுருக்கெழுத்து, அதிவேகத்தட்டச்சு, புதுமுக இளநிலை, கணக்கியல் பாடங்களில் சுமாா் 7 லட்சம் போ் தோ்ச்சி பெற்று வருகின்றனா். மேலும், சிஓஏ எனப்படும் அலுவலக தன்னியக்க கணினி தோ்விலும் பலா் தோ்ச்சி பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் கடந்த ஆண்டு வெளியிட்ட அரசாணை எண் 187-ன்படி, சிஓஏ தோ்வுடன் தட்டச்சையும் இணைத்து நடத்துவது என தெரிவிக்கப்பட்டது. புதிய அரசாணை மூலம் 4-ஆயிரத்துக்கும் மேற்பட்ட தட்டச்சு பயிலகங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும் தட்டச்சு இயந்திரங்களை பயன்படுத்தாமல் தட்டச்சுப் பயிற்சி செய்யாமல் சிஓஏ தோ்வு எழுதுவது சாத்தியமற்றது.

எனவே அரசாணை எண் 187-யை ரத்து செய்ய வலியுறுத்தி, வருகிற 7-ஆம் தேதி மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com