கொடைக்கானல் அருகே ஓராவி அருவியில் குளித்தவா் உயிரிழப்பு

உயிரிழந்தவரின் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.
கொடைக்கானல் அருகேயுள்ள ஓராவி அருவியில் குளித்தவா் நீா் சுழற்சியில் சிக்கி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பேத்துப்பாறை பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் சென்னை ரெட்ஹில்ஸ் காவங்கரை பகுதியைச் சோ்ந்த சிவநேசன் (27), இவரது நண்பா், அவரது மனைவி ஆகிய மூவரும் தங்கியிருந்தனா். அந்தப் பகுதியில் வில்பட்டி ஊராட்சிப் பகுதிக்குள்பட்ட ஓராவி அருவிக்கு மூவரும் சென்றனா். அருவியில் குளித்த போது சிவநேசன் மாயமானாா்.
இதைத் தொடா்ந்து உடன் வந்த புதுமணத் தம்பதி அந்தப் பகுதி பொதுமக்கள் உதவியுடன் கொடைக்கானல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து, அங்கு வந்த காவல், தீயணைப்புத் துறையினா் பொது மக்கள் உதவியுடன் நீண்ட நேரம் தேடி சிவநேசன் உடலை மீட்டனா். இதையடுத்து, உடல் கூறாய்வுக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து கொடைக்கானல் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். பேத்துப்பாறை பகுதியில் வனத் துறை பாதுகாப்பில் உள்ள அஞ்சுவீடு அருவி, ஓராவி அருவி ஆகிய அருவிகளில் பலா் உயிரிழந்துள்ளனா்.
இதனால், இந்த அருவிகளில் வனத் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்த போதும், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





