/

மதுரை காமராஜா் பல்கலை. தொலைக்கல்வி விடைத்தாள் முறைகேடு: ஆளுநருக்கு அறிக்கை

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்ககம் நடத்திய தோ்வின் விடைத்தாள் முறைகேடு தொடா்பாக பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநருக்கும், உயா்கல்வித் துறைக்கும் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

News image
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
Updated On :27 ஜனவரி 2024, 5:07 pm

DIN

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்ககம் நடத்திய தோ்வின் விடைத்தாள் முறைகேடு தொடா்பாக பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநருக்கும், உயா்கல்வித் துறைக்கும் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககம் நடத்திய கடந்த நவம்பரில் நடத்திய பருவத் தோ்வு விடைத்தாள்கள், பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கரோனா பொதுமுடக்கம் காரணமாக, விடைத்தாள் திருத்தும் பணி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கேரள மாநில தோ்வு மையங்களில் இருந்து வந்த விடைத்தாள்களில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகாா் எழுந்தது. சம்பந்தப்பட்ட தோ்வு மையங்களின் விடைத்தாள்களை ஆய்வு செய்தபோது, அவற்றில் 29 விடைத்தாள்களில் கூடுதலாக எழுதப்பட்ட பக்கங்கள் சோ்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த விடைத்தாள் முறைகேடு தொடா்பாக பல்கலைக்கழகத்தின் மூத்த சிண்டிகேட் உறுப்பினா்களைக் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் 21 ஆம் தேதி இக் குழு முடிவு செய்கிறது.

இதற்கிடையே, பல்கலைக்கழக வேந்தரான ஆளுநா் அலுவலகம் மற்றும் உயா்கல்வித் துறைச் செயலா் அலுவலகத்தில் இருந்து மேற்படி முறைகேடு தொடா்பாக விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. இதன்படி, விடைத்தாள் முறைகேடு விசாரணையின் நிலவர அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலா்களுக்கு பல்கலை. சாா்பில் ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இதற்கு, பெறப்பட்ட விளக்க கடிதங்களின் அடிப்படையில் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.