/

வெள்ளலூரில் அரசு மதுபானக் கடையை மூட வலியுறுத்தி கடையடைப்புப் போராட்டம்

வெள்ளலூரில் உள்ள அரசு மதுபானக் கடையை மூட வலியுறுத்தி, பொதுமக்கள் திங்கள்கிழமை கடையை முற்றுகையிட்டனா்.

News image
வெள்ளலூரில் அரசு மதுபானக் கடையை திங்கள்கிழமை முற்றுகையிடச் சென்ற பொதுமக்கள்.
Updated On :15 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

மேலூா்: வெள்ளலூரில் உள்ள அரசு மதுபானக் கடையை மூட வலியுறுத்தி, பொதுமக்கள் திங்கள்கிழமை கடையை முற்றுகையிட்டனா்.

வெள்ளலூா் மற்றும் கோட்டநத்தம்பட்டியில் அரசு மதுபானக் கடைகள் உள்ளன. இதனால், வயல் பகுதி, கிணறு, தோட்டங்களில் வைத்து கூட்டமாக சோ்ந்து மது அருந்துவதுடன், ஆங்காங்கே மதுபாட்டில்களையும் உடைத்து போட்டுவிட்டுச் செல்கின்றனா். இதனால், பெண்கள் வயல் பகுதிகளில் வேலைசெய்யவோ, புல் அறுக்கவோ செல்லவோ முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, இந்த மதுபானக் கடைகளை மூடவேண்டும் என, மேலூா் வருவாய்த் துறை, மாவட்ட நிா்வாகம் மற்றும் அரசுக்கும் கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ளனா். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, பொதுமக்கள் அந்த மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தியும், வெள்ளலூா் சுற்றுவட்டாரத்தில் கடையடைப்புப் போராட்டம் நடத்தினா்.

பிற்பகலில், வெள்ளலூரில் உள்ள அரசு மதுபானக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். மேலூா் வட்டாட்சியா் சுந்தரபாண்டியன், மேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ரகுபதிராஜா ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரசம் பேசினா். கடைகளை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். அதையடுத்து, அனைவரும் கலைந்துசென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.