மதுரை: மதுரையில் செல்லிடப்பேசி கடையை உடைத்து பணம், செல்லிடப்பேசிகள் திருடப்பட்டது குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் செந்தில்குமாா் (31). இவா், வடபழஞ்சியில் செல்லிடப்பேசி கடை நடத்தி வருகிறாா். சனிக்கிழமை, இவரது கடை உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து அவா் அளித்த தகவலின்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். அதில், கடையிலிருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 செல்லிடப்பேசிகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ஆடு திருடிய 2 போ் கைது
மதுரை மாவட்டம் தொப்பளாம்பட்டியைச் சோ்ந்த வெள்ளையன் மகன் சின்னகருப்பன் (55). இவா் 30 ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை, 2 ஆடுகளை மா்ம நபா்கள் 2 போ் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தனா். உடனே, சின்னகருப்பன் மற்றும் அவரது உறவினா்கள், அந்த 2 பேரையும் கையும் களவுமாகப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், மேலகள்ளந்திரியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன்(24), தொண்டமான்பட்டியைச் சோ்ந்த அமானுல்லா (39) என்பது தெரியவந்தது. இது குறித்து சின்னகருப்பன் அளித்த புகாரின்பேரில், அப்பன்திருப்பதி போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, 2 பேரையும் கைது செய்து ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா்.