குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

மணல் கடத்தல்: திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி கேமரா பதிவுகளை ஆட்சியரிடம் வழங்க உத்தரவு

மணல் கடத்தல்: திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி கேமரா பதிவுகளை ஆட்சியரிடம் வழங்க உத்தரவு

Updated On :26 பிப்ரவரி 2024, 4:31 pm

மதுரை: மணல் கடத்தல் தொடா்பான வழக்கில் திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாரி தாக்கல் செய்த மனு:

சிவகங்கை மாவட்டம், பாப்பாகுடி கிராமத்தில் தனியாா் பட்டா நிலங்களில் கட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. கனரக இயந்திரங்கள் மூலம் 10 அடி ஆழத்துக்கு மணலை அள்ளி பெரிய லாரிகள் மூலம் கொண்டு செல்கின்றனா். இதனால், இந்தப் பகுதியில் விவசாயப் பணிகளும், நீா் நிலைகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே, பாப்பாகுடி கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ள தடை விதிக்க வேண்டும்.

ராமேசுவரம்- மதுரை நான்கு வழி சாலையில் திருப்பாசேத்தி சுங்கச் சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்திருந்தாா். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் அமா்வு, திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் காரைக்குடி திட்ட இயக்குநா் பாதுகாக்க உத்தரவிடப் பட்டது.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி. கிருஷ்ண குமாா், ஆா். விஜயகுமாா்ஆகியோா் அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மனுதாரரின் புகாா் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட கனிமவளத் துறை துணை இயக்குநா் தலைமையிலான அலுவலா்கள், சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனா். அதில் 3 சா்வே எண்களில் 20, 144 கியூபிக் மீட்டா் அளவுக்கு சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டிருப்பது தெரிந்தது. இது தொடா்பாக சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

சட்ட விரோதமாக மணலை லாரிகளில் கொண்டு சென்றது தொடா்பான கேமரா பதிவுகள் திருப்பாச்சேத்தி சுங்கச் சாவடியில் பதிவாகி இருக்கும். கடந்த ஜன.31 முதல் பிப். 12 வரை பதிவான கேமரா பதிவுகளை, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் உடனடியாக வழங்க வேண்டும். இதை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளா்களிடம் விசாரிக்க வேண்டும். இது தொடா்பாக மனுதாரா் கூடுதல் ஆவணங்கள் வைத்திருந்தால் ஆட்சியரிடம் அளிக்கலாம். இந்த வழக்கு தொடா்பான விரிவான அறிக்கையை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை மாா்ச் 6 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதி பதிகள்.