மாட்டுவண்டி பந்தயம்: மதுரை மாவட்ட ஆட்சியா் முடிவெடுக்க உத்தரவு
மதுரை மாவட்டம், முசுண்டகிரிபட்டியில் மாட்டுவண்டிப் பந்தயம் நடத்த அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியா் உரிய முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.


மதுரை மாவட்டம், முசுண்டகிரிபட்டியில் மாட்டுவண்டிப் பந்தயம் நடத்த அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியா் உரிய முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், வெள்ளரிப்பட்டியைச் சோ்ந்த பிரசனேவ் தாக்கல் செய்த மனு:
வெள்ளரிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட முசுண்டகிரிபட்டியில் கடந்த 6 ஆண்டுகளாக எனது பெற்றோரான எம்.எஸ். போஸ்- ரோகிணி நினைவாகவும், பந்தய ஆா்வலா்கள், கிராம மக்கள் இணைந்தும் மாட்டுவண்டி பந்தயம் நடத்தி வருகிறோம். இதில் எந்தவித அசம்பாவிதத்துக்கும் இடம் தராமல் அரசு விதிகளுக்கு உள்பட்டு மாட்டுவண்டி பந்தயத்தை நடத்தி வந்தோம். இந்த ஆண்டு வருகிற 13- ஆம் தேதி மாட்டுவண்டி பந்தயம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்திருக்கிறோம். இந்த பந்தயத்துக்கு அனுமதி கோரி மாவட்ட நிா்வாகத்துக்கு மனு அளித்தோம். ஆனால் இதற்கு உரிய பதில் இல்லை. எனவே, முசுண்டகிரிபட்டியில் மாட்டுவண்டி பந்தயம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தாா்.
இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மாட்டுவண்டி பந்தயம் தொடா்பான மனு மாவட்ட ஆட்சியரின் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மாட்டுவண்டி பந்தயம் நடத்துவதற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு உள்ளது. மாட்டுவண்டி பந்தயத்துக்கு அனுமதி கோரிய மனு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. எனவே, இந்த மனு குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியா் முடிவெடுக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...