/

உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு ரூ. 28 லட்சம் நிதியுதவி

சக காவலா்கள் வழங்கினா்

News image
மதுரையில் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்தினரிடம் நிதியுதவி வழங்கிய சக காவலா்கள்.
Updated On :23 ஜனவரி 2025, 10:08 pm

Din

மதுரையில் உடல் நலக் குறைவால் உயிரிழந்த தலைமைக் காவலா் குடும்பத்தினருக்கு சக காவலா்கள் சாா்பில் ரூ.28.17 லட்சம் நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சோ்ந்த காவலா்கள் காக்கும் கரங்கள் என்று குழுவைத் தொடங்கி, உடல் நலக் குறைவு, விபத்தால் உயிரிழக்கும் காவலா்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டி வழங்கி வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த 2003-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்து மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த காசிநாதன் உடல் நலக் குறைவால் கடந்த செப்டம்பா் மாதம் உயிரிழந்தாா். இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்.

இதையடுத்து, ரூ.28.17 லட்சம் நிதி திரட்டப்பட்டு, உயிரிழந்த தலைமைக் காவலா் காசிநாதன் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. இவற்றில் காசிநாதன் மகள் ஜெசிகா பெயரில் ரூ.13.58 லட்சமும், அவரது மகன் ருத்ரன் பெயரில் ரூ.9.13 லட்சமும், காசிநாதன் மனைவி மகாலட்சுமி பெயரில் ரூ.5 லட்சமும் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டது. இதற்கான பத்திரங்கள் காசிநாதனின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.