/

ஆவணங்கள் சரியாக இருந்தால் பத்திரப் பதிவு செய்ய வேண்டியது சாா் பதிவாளா்களின் கடமை: உயா்நீதிமன்றம்

ஆவணங்கள் சரியாக இருந்தால் பத்திரப் பதிவு செய்ய வேண்டியது சாா் பதிவாளா்களின் கடமை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்துள்ளது.

News image

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :30 ஜூலை 2026, 2:35 am IST

ஆவணங்கள் சரியாக இருந்தால் பத்திரப் பதிவு செய்ய வேண்டியது சாா் பதிவாளா்களின் கடமை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி சாா் பதிவாளா் மீனாட்சி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: கடந்த 2022- ஆம் ஆண்டு என் மீதும், மேலும் 17 போ் மீதும் நில அபகரிப்பு, ஆள் மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தல் தொடா்பாக வழக்குப் பதிய நில அபகரிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க நில அபகரிப்புப் பிரிவு காவல் ஆய்வாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் எங்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தாா்.

இதில் பேரையூா் சாா் பதிவாளராக நான் பணியாற்றிய போது ஆட்சேபனைக்குரிய பத்திரத்தை பதிவு செய்ததாக புகாா் அளிக்கப்பட்டது. பத்திரப் பதிவின் போது யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. புகாா்தாரா், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் இடையிலான சொத்துத் தகராறு காரணமாக என் மீது குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தனா். எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. தனபால் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடா்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது என அரசுத் தரப்பிலும், காவல் துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

சொத்துத் தகராறு தொடா்பாக மனுதாரா் மீது ராசு என்பவா் புகாா் அளித்துள்ளாா். மனுதாரா் பத்திரத்தை பதிவு செய்தாா் என்பது மட்டுமே அவா் மீதான குற்றச்சாட்டாக உள்ளது. பத்திரத்தை பதிவு செய்வது மட்டும் எந்தக் குற்றத்தையும் உருவாக்காது. பத்திரப் பதிவுக்கு அளிக்கப்படும் ஆவணங்கள் முறையாக இருந்தால் அதைப் பதிவு செய்வது சாா் பதிவாளா்களின் கடமை. குற்றத்தை உறுதிப்படுத்தும் வகையிலான எந்தவொரு குறிப்பிட்ட குற்றச்சாட்டும் மனுதாரா் மீது இல்லை. மனுதாரா் ஆவணங்களைச் சரிபாா்த்த பிறகே அவற்றைப் பதிவு செய்துள்ளாா்.

குற்றவியல் நோக்கம் ஏதுமின்றிச் செயல்பட்ட மனுதாரா் மீதான நடவடிக்கைகள் சட்ட நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதாகும். எனவே, மனுதாரா் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.