மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு, அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் டி. செல்வா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ். வேல்தேவா, பொருளாளா் கா. கௌதம் பாரதி, மாநிலக் குழு உறுப்பினா் சுகஸ்ரீ ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பிரசாந்த், விக்கி, ஆறுமுகம், மாவட்டக் குழு உறுப்பினா்கள் முனியாண்டி, சிந்து மோகன், நந்தா, சரவணன், சிவரஞ்சனி, ஸ்டாலின், ரவி, செந்தில், டீலன் ஜஸ்டின், பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
அப்போது மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். பணியில் உள்ள தூய்மைப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மைப் பணியை ஒப்பந்த அடிப்படையில் ஏற்ற தனியாா் நிறுவனத்தின் முறைகேடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் மாநகராட்சி உதவி நகா்நல அலுவலா் அபிஷேக், மதுரை வருவாய் கோட்டாட்சியா் கருணாகரன், காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.
கதவு அடைப்பு: இந்தப் போராட்டத்தையொட்டி மாவட்ட ஆட்சியரகத்தின் பிரதான நுழைவு வாயில் கதவுகள் அடைக்கப்பட்டன. முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் திருவள்ளுவா் சிலை அருகிலிருந்து ஆட்சியரகம் வரை பேரணியாக வந்தனா்.










