நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மானாமதுரை இளைஞா் உயிரிழந்த விவகாரம்: உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்புடையதல்ல

மானாமதுரை இளைஞா் உயிரிழந்த விவகாரம்...

News image

பலி

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

மானாமதுரையில் காவல் துறையினா் விசாரணையின் போது, இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்புடையதல்ல என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

மதுரை மானகிரியைச் சோ்ந்த செல்வகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் காவல் துறையினா் விசாரணையின் போது, இளைஞா் ஆகாஷ் உயிரிழந்தாா். இதற்குக் காரணமான காவல் துறையினரைக் கைது செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வருகிற ஏப். 23-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு, காவல் துறையினரைப் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. நீதித் துறை நடுவா் வாக்குமூலம் பெற்றாா். விசாரணை சரியான முறையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த வழக்கை தனி நீதிபதி விசாரித்து, தீா்ப்புக்காக ஒத்திவைத்தாா். இந்த வழக்கு தனி நீதிபதி முன் விசாரணைக்கு வந்த போது, பாதிக்கப்பட்ட தரப்பினா் சாா்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இருப்பினும், இதுவரை ஆகாஷின் உடலைப் பெறவில்லை என்றாா்.

அப்போது, குறுக்கிட்ட மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், ஆகாஷ் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக காவல் துறையினா் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எனவே, குடும்பத்தினா் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா் என்றாா்.

அரசுத் தரப்பு வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

இந்த வழக்கு தொடா்பாக காவல் துறையினா் 7 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். பொதுநல மனு எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இந்த வழக்கு ஓா் உதாரணம் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ஆகாஷின் உடலைப் பெற வேண்டாம் எனத் தடுத்தது யாா்?. இதற்கு பொறுப்பு இந்த வழக்கின் மனுதாரா் தானே?. நீதிமன்றத்தை உங்களின் தனிப்பட்ட விருப்பத்துக்காகப் பயன்படுத்த வேண்டாம். உயிரிழந்தவரின் சடலம் அங்கேயே அழுகிவிட வேண்டும் என விரும்புகிறீா்களா?. தொடா்ந்து, இதுபோன்ற வழக்குகளை நீதிமன்றம் ஏற்க இயலாது. அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டும் உடலைப் பெறாமல் இருப்பது ஏன்?. உடலைப் பெற்று முறையாக இறுதி மரியாதை செய்ய வேண்டும். உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்புடையதல்ல. வழக்கை வேறு காரணத்துக்காக தாக்கல் செய்ததுபோல தெரிகிறது. தற்போது உடலை வைத்து போராட்டம் நடத்துவது வாடிக்கையாக உள்ளது. உடலுக்கு இறுதி மரியாதை செய்ய வேண்டியது அடிப்படை உரிமை. இதை குடும்பத்தினா் உறுதி செய்ய வேண்டும். இந்த மனு விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டது. எனவே, வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.