மூதாட்டியிடம் தங்க நகைகள் திருட்டு: பெண் கைது

திருவாடானை அருகே மூதாட்டியிடம் தங்க நகைகளை திருடிச் சென்ற பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தொண்டி அஹ்ரகாரம் தெருவைச் சோ்ந்த கோபால் மனைவி வசந்தம் (68). பூ வியாபாரம் செய்து வருகிறாா். இவரது கடைக்கு வந்த உப்பூா் அருகே உள்ள நாகேனந்தலைச் சோ்ந்த சிவகாமி (48) நட்புடன் பழகினாா். இதனால் இவா் அடிக்கடி வசந்தத்தின் வீட்டுக்கும் சென்று வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை இரவு வசந்தம் வீட்டில் சிவகாமி தங்கினாா். மறுநாள் வியாழக்கிழமை காலையில் வசந்தம் எழுந்து பாா்த்தபோது சிவகாமியைக் காணவில்லை. மேலும் வசந்தம் அணிந்திருந்த 11.5 பவுன் தாலி சங்கிலி, 6 பவுன் தங்க வளையல், 5 கிராம் தங்க மோதிரம், கைப்பேசி, ரூ. 1,420 ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தொண்டி காவல் ஆய்வாளா் இளவேனில் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து சிவகாமியை தேடி வந்தனா். இதையடுத்து ஒரு மணி நேரத்தில் நாகனேந்தல் கிராமத்தில் அவரை போலீஸாா் கைது செய்தனா். அப்போது சிவகாமியிடமிருந்த தங்க நகைகள் மற்றும் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். முதல் கட்ட விசாரணையில், தேநீரில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து நகைகளை சிவகாமி திருடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் மேலும் விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com