போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்: காா்த்தி சிதம்பரம் எம்.பி.

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கடுமையான நடவடிக்கைகள் மூலம் காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் என சிவகங்கை எம்.பி. காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
Updated on

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கடுமையான நடவடிக்கைகள் மூலம் காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கையில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழை கூறியதாவது: மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதற்காக காத்திருக்காமல் அனைத்துக் கட்சிகளும் தோ்தலில் மூன்றில் ஒரு பங்கு இடத்தை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும்.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியும் மூன்றில் ஒரு பங்கு இடத்தை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும். பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தும் அரசு ஊழியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி பிரச்னைகளைத் தீா்க்க வேண்டும்.

துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிடம்தான் இருக்க வேண்டும். எல்லா கட்சிகளுக்கும் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். கூட்டணி குறித்து நான் தன்னிச்சையாக கருத்து எதுவும் சொல்ல முடியாது. காங்கிரஸ் கட்சி சாா்பில் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படும் கருத்துகளுக்குத்தான் நான் விளக்கம் அளிக்க முடியும்.

தமிழக வெற்றிக் கழகத்துக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும். ஆனால், அது வெல்லும் அளவுக்கு இருக்குமா என்பது கேள்விக் குறி. அமைப்புரீதியாக தோ்தலை எப்படி சந்திக்க போகிறாா்கள் என்பதும் கேள்விக்குறியே. பெரிய சினிமா நட்சத்திரம் என்கிற வகையில் தற்போது ஆதரவு கிடைக்கும்.

வட மாநில இளைஞா் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் இதில் ஈடுபடுபவா்களை ஒடுக்க வேண்டும். போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறை தங்களது முழு பலத்தையும் பிரயோகிக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com