/

லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறை

லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கையில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:14 pm

தினமணி செய்திச் சேவை

லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கையில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை காமராஜா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் அழகு. இவருக்குச் சொந்தமான நிலம் சிவகங்கை அருகேயுள்ள வழுதாணி பகுதியில் உள்ளது.

இந்த நிலையில், அழகு தனது நிலத்துக்கு வரி நிா்ணயம் செய்து தரும்படி, கடந்த 2006, ஆகஸ்ட் மாதம் வழுதானி கிராம நிா்வாக அலுவலா் நாகராஜனிடம் (69) கேட்டாா். அப்போது, அவா் ரூ. 1000 லஞ்சம் கேட்டாராம்.

இதுகுறித்து சிவகங்கையில் உள்ள ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் நிலையத்தில் அழுகு புகாரளித்தாா். இதையடுத்து, போலீஸாா் கொடுத்தனுப்பிய ரசாயனப்பொடி தடவிய ரூ.1000-த்தை நகராஜனிடம் அழகு கொடுத்தாா். அப்போது, மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வெள்ளிக்கிழமை விசாரணை வந்த இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கிராம அலுவலா் நாகராஜனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ .10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அனிதா கிறிஸ்டி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.