போடியில் வியாழக்கிழமை, வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
போடி வ.உ.சி. நகர் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஜெகதீஸ் (31). இவரது மனைவி பாண்டியம்மாள் (31). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன் ஜெகதீசுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாம். இதனால் அடிக்கடி பாண்டியம்மாளுடன் தகராறு செய்வதும் பின்னர் தற்கொலை முயற்சி செய்வதுமாக இருந்தாராம். இதே போல் வியாழக்கிழமையும் பாண்டியம்மாளுடன் தகராறு செய்த ஜெகதீஸ், திடீரென வீட்டிலிருந்த ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டாராம். பின்னர் பாண்டியம்மாளும், பக்கத்து வீட்டினரும் கதவை உடைத்து பார்த்த போது ஜெகதீஸ் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அ.ராஜலிங்கம் மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: இதேபோல் போடி புதூர் ரயில்வே லைன் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி மனைவி முத்துக்காமு (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக முத்துக்காமு, தனது தாயார் முத்துலட்சுமி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை முத்துக்காமு வீட்டிலிருந்த விஷ மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் நடராஜன் மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.