தேனி மாவட்டத்தில் நெல் விவசாயிகள் நடப்பு ராபி பருவத்துக்கு வரும் நவ.30-ஆம் தேதிக்குள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து காப்பீட்டுத் தொகை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இயற்கை இடர்பாடுகள், பூச்சி நோய் தாக்குதல் ஆகியவற்றால் விவசாயப் பயிர்களில் ஏற்படும் பாதிப்பு மற்றும் மகசூல் இழப்புக்கு நிவாரணம் பெற விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர முன் வர வேண்டும். பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், நிலத்தின் அடங்கல் பத்திரம் ஆகியவற்றுடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் அல்லது பொது சேவை மையங்களில் விண்ணப்பித்து காப்பீட்டுத் தொகை செலுத்தலாம்.
மாவட்டத்தில் நடப்பு ராபி பருவத்துக்கு நெல் சாகுபடி விவசாயிகள் வரும் நவ.30-ஆம் தேதிக்குள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து காப்பீட்டுத் தொகை செலுத்தலாம். பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். நுண்ணீர் பாசனத்துக்கு கடன்: நுண்ணீர் பாசனத்துக்கு அரசு வழங்கும் மானியத் தொகையை தவிர்த்து, விவசாயிகள் தாங்கள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகைக்கு 9.5 சதவீதம் வட்டியில் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. நுண்ணீர் பாசனத்துக்கு கடனுதவி பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









