முல்லைப் பெரியாறு அணையில் நிரந்தர செயற்பொறியாளர் நியமிக்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மார்ச் மாதம் ஓய்வுபெறவுள்ள அதிகாரியை செயற்பொறியாளராக நியமித்துள்ளது, கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கம்பத்தில் உள்ள பெரியாறு அணை சிறப்புக் கோட்ட அலுவலகத்தில் செயற்பொறியாளர் மற்றும் உதவிச் செயற்பொறியாளர் ஆகியோர், பெரியாறு அணையின் மத்திய துணை கண்காணிப்புக் குழுவில் தமிழக பிரதிநிதிகளாக உள்ளனர். தற்போது, பெரியாறு அணையின் கோட்டப் பொறியாளராக சாம் இர்வின் உள்ளார்.
பெரியாறு அணை செயற்பொறியாளராக இருந்த மாதவன், கடந்த 2017 ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார். அதுமுதல், பெரியாறு-வைகை வடிநிலக் கோட்டம் மதுரை பொதுப்பணித் துறைச் செயற்பொறியாளர் சுப்பிரமணியன் கூடுதல் பொறுப்பாக பெரியாறு அணைச் செயற்பொறியாளராகவும், தற்போது துணைக் குழுவின் தமிழக பிரதிநிதியாகவும் உள்ளார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டங்களில், பேபி அணையை பலப்படுத்துவது, வல்லக்கடவு வழியாக பாதை அமைத்தல், பெரியாறு அணைக்கு தரைவழி மின்சாரம் உள்ளிட்ட எந்தவித தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. கூடுதல் பொறுப்பிலுள்ள அதிகாரிகள் எந்தவொரு வேலையையும் சிரத்தையுடன் செய்வதும் இல்லை, துணைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்துவதும் இல்லை என்பன உள்ளிட்ட புகார்கள் கூறப்படுகின்றன.
எனவே, பெரியாறு அணையின் கூடுதல் பொறுப்பு அதிகாரிகளை விடுவித்து, நிரந்தரமாக செயற்பொறியாளரை நியமிக்க வேண்டும் என, கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் உதவிச் செயற்பொறியாளராக இருந்த விஜிபாபு பதவி உயர்வு பெற்று, பெரியாறு அணை செயற்பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், மார்ச் மாதம் ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், முல்லைப் பெரியாறு அணையில் தமிழக உரிமைகளை பெறுவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுவதாக, கம்பம் பள்ளத்தாக்கு மற்றும் 5 மாவட்ட விவசாயிகள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








