தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மஞ்சளார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தேவதானபட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதி வரை உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மஞ்சளார் ஆற்றில் உறைகிணறுகள் அமைத்து குடிநீர் எடுக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால் மஞ்சளாறு அணை நீர்வரத்தின்றி வறண்டு காணப்பட்டது.இந்நிலையில் குடிநீர் தேவைக்காக மஞ்சளார் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து குடிநீர் தேவைக்காக 10 கனஅடி தண்ணீர் இன்று திறக்கப்பட்டுள்ளது.
இந்த 10 க. அடி தண்ணீர் இரண்டு தினங்களுக்கு திறக்கப்படுகிறது. மேலும் 57 அடி உயரம் உள்ள மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 35.50 அடியாகவும் நீர் இருப்பு 132.45 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. நீர் வரத்து இல்லை எனினும் குடிநீருக்காக மட்டும் 10 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.