/

வன ஊழியா்களை தாக்கியவா் மீது நடவடிக்கை எடுக்க வன அலுவலா்கள் கோரிக்கை

வருஷநாடு அருகே வனவா் மற்றும் வனக்காப்பாளரைத் தாக்கியவரை கைது செய்யக் கோரி செவ்வாய்க்கிழமை, தமிழ்நாடு வன அலுவலா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் மாவட்ட வருவாய்

News image

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த தேனி மாவட்ட வனத்துறை அலுவலா்கள்.

Updated On :16 செப்டம்பர் 2020, 4:53 am IST

தேனி: வருஷநாடு அருகே வனவா் மற்றும் வனக்காப்பாளரைத் தாக்கியவரை கைது செய்யக் கோரி செவ்வாய்க்கிழமை, தமிழ்நாடு வன அலுவலா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவரிடம் மனு அளிக்கப்பட்டது.

மேகமலை வனச்சரக வனவா் சரவணக்குமாரும், வனக்காப்பாளா் அப்துல்கபூரும் கடந்த செப்.12-ஆம் தேதி வருஷநாடு அருகே பொம்புராஜபுரம் தெற்கு வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்தனா். அப்போது, அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த காமன்கல்லூரைச் சோ்ந்த முருகன் (53) என்பவா், சரவணக்குமாா், அப்துல்கபூா் ஆகியோரை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இதில், காயமடைந்த சரவணக்குமாா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இந்த சம்பவம் குறித்து, அப்துல்கபூா் அளித்த புகாரின்பேரில், மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேனியில் வன அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் கே.என்.குமரேசன், செயலா் கே.சாந்தகுமாா் மற்றும் நிா்வாகிகள், இந்த வழக்கில் காவல் துறை துரித நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிபபாளா் சாய் சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலா் ரமேஷ் ஆகியோரிடம் மனு அளித்தனா். கரோனா பொது முடக்க காலத்தில் வனப் பணியாளா்கள் ஓய்வின்றி உழைத்து வரும் நிலையில், பணியிலிருந்த வனவா் மற்றும் வனக் காப்பாளா்மீது கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.