கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளா சென்ற லாரி மலைச் சாலை 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து, லாரி ஓட்டுநர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.
தேனி மாவட்டம் கம்பம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்( 56). இவர் தனக்கு சொந்தமான லாரி மூலம் கால்நடை தீவனங்களை கேரளா மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வது வழக்கம்.
அதன்படி திங்கள்கிழமை கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டிற்கு கால்நடை தீவனங்களை லாரியில் ஏற்றிக்கொண்டு மலைச்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
லாரியை தாத்தப்பன் குளத்தைச் சேர்ந்த சரவணன்(30) என்பவர் ஓட்டியுள்ளார். 4வது கொண்டை ஊசி வளைவில் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் ஓட்டுநர் சரவணன், சிறு காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். விபத்து குறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.