பணியாளர் விஷம் குடித்து தற்கொலை: கம்பம் நகராட்சி அலுவலகத்தை துப்புரவுப் பணியாளர்கள் முற்றுகை
கம்பம் நகராட்சி துப்புரவுப் பணியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் மேஸ்திரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இதர பணியாளர்கள் திங்கள்கிழமை முற்றுகை மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம், கம்பம் மணி நகரைச் சேர்ந்தவர் சின்னன் மகன் மணிகண்டன் (54), கம்பம் நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த அக்.11ல் துப்புரவுப் பணியாளர் மணிகண்டன் தனக்கு விடுமுறை அளிக்குமாறு மேஸ்திரி ஜோதிமுருகனிடம் கேட்டார். அதற்கு ஜோதிமுருகன் வேலைக்கு வரவேண்டும் என்றார். இதனால் விரக்தியடைந்த மணிகண்டன் விஷ மருந்தை குடித்து மயங்கி விழுந்தார், அருகில் உள்ளவர்கள் கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தனக்கு விடுமுறை தராததே தற்கொலை முயற்சிக்கு காரணம் என்று மேஸ்திரி ஜோதிமுருகன் காணொளி மூலம் வாக்குமூலம் கொடுத்தது இணையதளங்களில் பதிவேற்றம் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஷம் குடித்த துப்புரவு பணியாளர் மணிகண்டன் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலை கேள்விப்பட்டதும் திங்கட்கிழமை நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மேஸ்திரி ஜோதி முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
இதையும் படிக்க- இந்தியாவில் இன்று மேலும் 13,596 பேருக்கு கரோனா
இதற்கிடையில் மணிகண்டன் உறவினர்கள் அதிகாரிகள் மற்றும் போராட்டக்காரர்களிடம் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளதாக தெரிவித்தனர். நகராட்சி துப்புரவு அலுவலர் சௌந்தரராஜன் பேசும்போது, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தார். அதன்பேரில் சுமார் 5 மணி நேரம் போராட்டம் நடத்திய ஆண், பெண் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு சென்றனர்.