மனைவி, மகன் இறந்த துக்கத்தில் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை செய்துகொண்டாா்.
தேனி மாவட்டம் கம்பம் குரங்கு மாயன் தெருவைச் சோ்ந்தவா் ரவி (52). ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாமல் இறந்தாா். பின்னா் மகன் விக்னேஷ் (20) உடன் ரவி வசித்து வந்தாா். இந்நிலையில் விக்னேஷ் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை மதியம் கம்பம் காமயகவுண்டன்பட்டி சாலையில், சின்ன வாய்க்கால் அருகே வயலில் உள்ள பூவரசம் மரத்தில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் சென்றவா்கள் அளித்த தகவலின்பேரில் கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மனைவி மற்றும் மகன் இறந்ததால், மன உளைச்சல் ஏற்பட்டு அவா் தற்கொலை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.