கம்பம்: தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்காக வனத்துறை சார்பில் பேருந்து இயக்கப்படுவதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவி அடர்ந்த வனப் பகுதியான ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த சுருளி அருவி கடந்த மாதம் திறக்கப்பட்டது. பின்னர் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
சுருளி மலை நுழைவுவாயிலிலிருந்து சுருளி அருவி வரை சுமார் 2 கிலோ மீட்டர் அடர்ந்த வனப் பகுதியாகும். இதனால் அருவிக்கு குளிக்க செல்லும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் நடைபயணமாக செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்காக அருவியின் நுழைவு வாயிலிலிருந்து அருவி அடிவாரம் வரை வனத்துறை சார்பில் பேருந்து இயக்கப்பட்டது நிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது பேருந்தில் ஏற்பட்ட பழுதுகள் நீக்கப்பட்டு கடந்த வாரம் முதல் வனத்துறை சார்பில் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. பேருந்தில் செல்ல ரூபாய் 10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதில் பெண்கள் வயது முதியவர்கள் குழந்தைகள் பேருந்தில் ஏறி சுருளி அருவிக்கு சென்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சோப்பு, நெகிழி பைகள் தடை
இதுபற்றி வனத்துறை அலுவலர் ஒருவர் கூறியது,
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சுருளி அருவியில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் வசதிக்காக வனத்துறை சார்பில் நிறுத்தப்பட்ட பேருந்து மீண்டும் இயக்கப்படுகிறது. அருவிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் சோப்பு, ஷாம்பூ, நெகிழி பைகள் போன்றவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வளாக பகுதில் மது அருந்துவது கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம் என்று தெரிவித்தார்.