கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் ஜே.எஸ்.டி மஹால் வளாகத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளை சார்பில் மாவட்ட மாநாட்டின் சிறப்புக் கலை இலக்கிய இரவு நடைபெற்றது. கவிஞர் ராஜிலா ரிஜ்வான் தலைமை தாங்கினார், மருத்துவர் பூர்ணிமா வரவேற்றார்.
மாவட்டச் செயலாளர் அய்.தமிழ்மணி துவக்கி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் சுருளிப்பட்டி சிவாஜி தொகுத்து வழங்கினார். மாநிலத் துணைப்பொதுச் செயலாளர் களப்பிரன் நமக்கான குடும்பமும் நகரமும், என்ற தலைப்பிலும், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன், கவிஞர் சக்திஜோதி, வழக்கறிஞர் துரைநெப்போலியன், ஆர்.கே.செல்வக்குமார், வின்னர் அலிம், மாநிலக்குழு உறுப்பினர் அ.உமர் பாரூக், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கவிஞர் தங்கேஸ்வரன், அல்லி உதயன், கரிச்சிராம் பாரதி, கே.ஆர்.லெனின், எஸ்.கனகராஜ், வெ.மோகன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
தேனி செவக்காட்டு கலைகுழு, ஊமைக்குரல்கள் ஆகிய குழுவினரின் நாடகங்கள் நடைபெற்றது. கரிசல் கருணாநிதியின் கிராமியப் பாடல்கள், பூமணம் ராஜா நடுவராக ஆ.முத்துக்குமார், ஐ.முரளிதரன் ஆகியோர் பங்கு கொண்ட இன்றைய சமூகச்சூழலில் ஆசிரியர் மாணவர் உறவு பலவீனமடைந்துள்ளது., மேம்பட்டுள்ளது என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது.
சிரிக்க சிந்திக்க என்ற தலைப்பில் சித்தேந்திரன் நகைச்சுவை நிகழ்வு நடத்தினார். மதிப்பளிப்பு விழாவில் நகரசபை தலைவர் வனிதா நெப்போலியன், துணைத்தலைவர் சுனோதா செல்வக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். மருத்துவர் க.செல்வம் நன்றி கூறினார்.