கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் மது போதையில் மைத்துனரை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர், உறவினர்களுக்கு பயந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம் கம்பம் 15-வது வார்டு கிராமச்சாவடி தெருவைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது மகன்கள் சிவக்குமார்(30), சங்கர்(33). இருவரும் கட்டடம் கட்டும் இடத்தில் டைல்ஸ் ஒட்டும் கூலித் தொழிலாளர்கள்.
திங்கள்கிழமை இரவு சங்கர் மது குடித்துவிட்டு கிராமச்சாவடி தெருவில் நின்று தகாத வார்த்தைகளால் பேசினார். இதை இவரது அண்ணன் சிவக்குமார் கண்டித்தார். அப்போது ஆத்திரமடைந்த சங்கர் சிவக்குமாரை கத்தியால் குத்த முயன்றார். இதை பார்த்த இவர்களின் மைத்துனர் தெய்வேந்திரன் மகன் காளிராஜ்(31), இருவரையும் விலக்கி விட்டார்.
இதனால் சங்கரின் ஆத்திரம் மைத்துனர் காளிராஜ் மீது திரும்பியது. கையில் வைத்திருந்த கத்தியால் காளிராஜை குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் கிடந்தவரை அருகில் உள்ளவர்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மைத்துனர் இறந்து விட்டதாக தகவல் கிடைத்ததும், சங்கர் காவல் துறையினருக்கு பயந்து, வீட்டுக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.
இதையும் படிக்க: சென்னை விமான நிலையத்தில் புதிய வசதி: மகிழ்ச்சியில் பயணிகள்
தெற்கு காவல் துறையினர் வீட்டுக்கு சங்கரை தேடி செல்லும்போது, தூக்கிட்டுத் தொங்குவதை பார்த்து, மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
காவல் ஆய்வாளர் ஆர்.லாவண்யா வழக்குப் பதிவு செய்து, இருவரது உடல்களையும், உடல் கூறாய்வு பரிசோதனைக்கு கம்பம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகிறார்.