கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் பேருந்து நிலையத்திற்கு வரும் போக்குவரத்தை மாற்றி அமைக்கக் கோரி வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையம் மாரியம்மன் கோயில் கீழ்புறம் உள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை குறிப்பிட்ட நிறுத்தங்களில் நிறுத்துவதில்லை. பிரதான சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னலில் பயணிகளை ஏற்றி இறக்கி சென்றனர்.
அதனால் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகளுக்கு வியாபாரம் எதிர்பார்த்த அளவிற்கு நடைபெறவில்லை. பேருந்து நிலையத்தில் கடை வைத்திருக்கும் வணிகர்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு போக்குவரத்தை மாற்றி தருமாறு கோரிக்கை வைத்தனர்.
புதன்கிழமை கவன ஈர்ப்பு போராட்டமாக 28 கடைகள் மற்றும் உணவு விடுதி போன்றவைகளை அடைத்து கண்டனத்தை தெரிவித்தனர். இன்று மாலை நகராட்சி அலுவலகத்தில் பேருந்து நிலைய வணிகர்கள், போக்குவரத்து நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் இணைந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று சங்க செயலாளர் செந்தில் தெரிவித்தார்.