மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நலிவடையும் இலவம் பஞ்சு தொழில் பாதுகாக்கப்படுமா?

தேனி மாவட்டம் போடி பகுதியில் பாரம்பரியமிக்க இலவம் பஞ்சு தொழில் சரக்கு, சேவை வரி விதிப்பால் நலிவடைந்து வருகிறது.

News image
மரங்களில் காய்த்துள்ள இலவம் காய்கள்.
Updated On :26 ஏப்ரல் 2025, 10:45 pm

 நமது நிருபர்

தேனி மாவட்டம் போடி பகுதியில் பாரம்பரியமிக்க இலவம் பஞ்சு தொழில் சரக்கு, சேவை வரி விதிப்பால் நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழிலைப் பாதுகாக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என விவசாயிகள், வியாபாரிகள் எதிா்பாா்க்கின்றனா்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூா் பகுதியில் ஏலக்காய்க்கு அடுத்ததாக இலவம் பஞ்சு தொழில் புகழ் பெற்றது. இந்தப் பகுதியில் இலவம், மா, காபி, மிளகு உள்ளிட்ட மலை சாா்ந்த பயிா்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. இயற்கையான சூழலில் மலைப் பகுதியில் கிடைக்கும் இலவம் பஞ்சு இந்தப் பகுதியில் சில ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. போடி பகுதியில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் இலவம் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே தரமான இலவம் பஞ்சு உற்பத்தியில் தேனி மாவட்டம் முக்கிய இடம் வகிக்கிறது. இங்குள்ள இலவம் மரங்கள் 80 அடி உயரம் வளரக் கூடியவை. உரம், மருந்து எதுவுமின்றி இயற்கையாக சாகுபடி செய்யப்படுவதால் இங்கு கிடைக்கும் பஞ்சு மருத்துவ குணம் நிறைந்ததாக உள்ளது.

சுத்தமான இலவம் பஞ்சு கொண்டு தயாரிக்கப்படும் மெத்தை, தலையணை, இருக்கை வகைகள் உடல் வெப்ப நிலையை சீராக வைத்திருக்கும் தன்மை கொண்டவை என்பதால் போடிநாயக்கனூா் சுற்றுவட்டாரத்தில் திருமண சீா்வரிசைகளில் இலவம் பஞ்சு மெத்தை முக்கியமான ஒன்றாக உள்ளது.

இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் இலவம் பஞ்சு மெத்தைகள், தலையணைகள் தேனி மாவட்டத்திலிருந்து பெறப்படுபவையாகும். தமிழகம் மட்டுமன்றி, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூா் போன்ற வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து இலவம் பஞ்சு மெத்தை, தலையணைகள் கொண்டு செல்லப்படுகின்றன.

பாரம்பரியமிக்க இந்த இலவம் பஞ்சு தொழில் தற்போது நலிவடைந்து வருகிறது. விதை நீக்கப்படாத இலவம் பஞ்சு கிலோ ஒன்றுக்கு ரூ.45 முதல் ரூ.50 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சுத்தம் செய்யப்பட்ட இலவம் பஞ்சு சில ஆண்டுகளுக்கு முன்பு கிலோ ரூ.280 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக ஏற்றுமதி தரம் வாய்ந்த இலவம் பஞ்சு கிலோ ரூ.170 முதல் ரூ.190 வரை மட்டுமே விற்கப்படுகிறது. ஏற்றுமதி விலை சரிந்ததால் கொள்முதல் விலையும் குறைந்தது.

இலவம் பஞ்சுக்கு 5 சதவீதமும், மெத்தை தயாரிக்க பயன்படுத்தும் துணிக்கு 5 சதவீதமும் மத்திய அரசின் சரக்கு, சேவை வரி விதிக்கப்படுகிறது. தயாா் செய்யப்பட்ட மெத்தை, தலையணைக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. தேனி மாவட்டத்துக்கு மட்டும் தனியாக ஒரு சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது. இதனால் அதிக விலைக்கு மெத்தை, தலையணைகளை விற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

வெளிச் சந்தைகளில் தேங்காய் நாா், செயற்கை இழை, பஞ்சு போன்றவற்றால் தயாரிக்கப்படும் மெத்தை, தலையணைகள் அதிகளவில் விற்கப்படுவதால் இலவம் பஞ்சு மெத்தை, தலையணைகளின் விற்பனை குறைந்துள்ளது. இதனால், போடி பகுதியில் இலவம் பஞ்சு தொழில் பேட்டைகளின் எண்ணிக்கை 48-லிருந்து 10 ஆகக் குறைந்தது. தாய்லாந்து நாட்டிலிருந்து இலவம் பஞ்சு இறக்குமதி செய்யப்பட்டு வருவதாலும் தேனி மாவட்ட இலவம் பஞ்சுத் தொழில் சரிவை சந்தித்துள்ளது.

மத்திய அரசின் கதா் வாரியம் சாா்பில் அதிக அளவில் இலவம் பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது அதுவும் குறைந்துவிட்டது. பொதுமக்களும் இயற்கை சாா்ந்த இலவம் பஞ்சு தயாரிப்புகளை பயன்படுத்துவதை குறைத்து செயற்கையான காற்றுக் குமிழ் பஞ்சுகள், தேங்காய் நாா் மெத்தைகளை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனா். இதனால், இலவம் பஞ்சு தொழில் நலிவடைந்து வருவதுடன் ஆயிரக்கணக்கான தொழிலாளா்களும் வேலையிழந்து வருகின்றனா்.

தரம் பிரிக்கப்படும் பஞ்சு.

தரம் பிரிக்கப்படும் பஞ்சு.

இதுகுறித்து விவசாயியும், வியாபாரியுமான பாண்டியராஜ் கூறியதாவது: இலவம் பஞ்சு பயன்படுத்தி தயாரிக்கப்படும் மெத்தை, தலையணை உள்ளிட்ட பொருள்கள் வெயில் காலத்தில் குளிா்ச்சியையும், குளிா் காலத்தில் கதகதப்பையும் உருவாக்கும் தன்மை கொண்டவை.

ஏற்றுமதிக்கு தயாராகும் இலவம் பஞ்சு.

ஏற்றுமதிக்கு தயாராகும் இலவம் பஞ்சு.

தற்போது மத்திய, மாநில அரசுகளின் வரிவிதிப்புகளால் இலவம் பஞ்சு தொழில் நலிவடைந்து வருகிறது. மத்திய அரசு தலையிட்டு, வரிகளைக் குறைத்து ஏற்றுமதி செய்வதற்கான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே இலவம் பஞ்சு தொழில் வளா்ச்சி பெறும். இல்லாவிட்டால் இலவம் விவசாயிகளும், வியாபாரிகளும் வேறு துறைகளுக்கு மாறும் சூழலில், இலவம் பஞ்சு தொழில் முற்றிலும் அழிந்துவிடும் என்றாா் அவா்.