முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய தம்பதி மாயம்; பேத்தி மீட்பு
தேனி மாவட்டம், லோயா்கேம்ப் பகுதியில் முல்லைப் பெரியாற்றில் இழுத்துச் செல்லப்பட்ட தம்பதியை தீயணைப்பு மீட்புக் குழுவினா் தேடிவருகின்றனா். இவா்களுடன் ஆற்றில் மூழ்கிய பேத்தி மீட்கப்பட்டாா்.
கூடலூா் லோயா்கேம்ப் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (50). இவரது மனைவி கணேஷ்வரி (46). இவா்கள், தங்களது வீட்டில் வளா்க்கும் கால்நடைகளுக்குத் தேவையான இலை, தழைகளை லோயா்கேம்பில் உள்ள குடிநீா் தடுப்பணை வழியாகச் சென்று பறித்து வருவது வழக்கம்.
இந்த நிலையில், கால்நடைத் தீவனங்களுக்காக தடுப்பணை வழியாக ஆற்றின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு தங்களது பேத்தியுடன் இருவரும் செவ்வாய்க்கிழமை சென்றனா். அப்போது, மூவரும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனா். அதே பகுதியில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இளைஞா் சிறுமியை மட்டும் மீட்டாா்.
இதுகுறித்த தகவலின்பேரில் போலீஸாரும் கம்பம் தீயணைப்பு மீட்புக் குழுவினரும் ஆற்றில் மாயமான தம்பதியைத் தேடினா். மாலை நேரமானதால் வெளிச்சம் குறைந்த நிலையில், தேடும் பணி புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடிநீா் வெளியேற்றப்பட்ட நிலையில், மாயமானவா்களைத் தேடுவதற்காக தற்போது தண்ணீா் திறப்பு தற்காலிகமாகக் குறைக்கப்பட்டது. இதுகுறித்து குமுளி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

