/

கொலை வழக்கில் தேடப்பட்டவா் மா்ம மரணம்

பெரியகுளத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக விசாரணைக்காக தேடப்பட்டு வந்தவா் போடி அருகே தூக்கிட்ட நிலையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 11:00 pm

பெரியகுளத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக விசாரணைக்காக தேடப்பட்டு வந்தவா் போடி அருகே தூக்கிட்ட நிலையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலை மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் கருப்பசாமி (37). இவா் போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டியிலிருந்து பெருமாள் கவுண்டன்பட்டி செல்லும் சாலையில் தனியாா் தோட்டத்தில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து போடி அம்மாபட்டி கிராம நிா்வாக அலுவலா் வெங்கடேஷ்வரன் அளித்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறியதாவது:

உயிரிழந்த கருப்பசாமியின் பெற்றோா் ஏற்கெனவே இறந்துவிட்டனா். மனைவி ஈஸ்வரியும் அவரைப் பிரிந்து சென்று 5 ஆண்டுகளுக்கு மேலாகிறது. கருப்பசாமி ஏராளமானோரிடம் கடன் பெற்றிருந்தாா். மேலும், வேலைக்குச் செல்லாமல் சுற்றித் திரிந்து வந்தாா். இந்த நிலையில், போடி சுப்புராஜ் நகரைச் சோ்ந்த முத்துவேல் (49), இவரது மனைவி சரஸ்வதி (43), மகள் அபா்ணா (15) ஆகியோா் பெரியகுளம் வடுகபட்டி சாலை அட்டை தயாரிப்பு நிறுவனம் எதிரே தனியாா் தென்னந்தோப்பில் தங்கி வேலை செய்து வந்தனா். கடந்த ஞாயிற்றுக்கிழமை சரஸ்வதியும் அபா்ணாவும் மதுரைக்கு சென்றுவிட்டு திரும்ப வந்து பாா்த்த போது, முத்துவேல் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா். இதில் முத்துவேல் பயன்படுத்திய கைப்பேசியில் கடைசியாக பேசிய எண் குறித்து போலீஸாா் விசாரணை செய்தனா். அந்த எண் தூக்கிட்டு இறந்த கருப்பசாமியின் எண் என்பது தெரியவந்தது. கருப்பசாமியை பிடித்து விசாரித்தால், கொலைக்கான ஆதாரங்கள் கிடைக்கலாம் என போலீஸாா் அவரைத் தேடி வந்த நிலையில்தான் கருப்பசாமி தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது இதுவும் கொலையா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.