தேனி
தேனியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்
தேனியில் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.3,000 விநியோகம் செய்யும் பணியை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தொடங்கி வைத்தாா்.
தேனி வேளாண்மை விளைபொருள் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன், பெரியகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ். சரவணக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் வாஞ்சிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
இதில் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் மொத்தம் 4, 30,825 குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சீனி, முழு கரும்பு ஆகியவை கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு, வேஷ்டி, சேலை, ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியா் கூறினாா்.

