போடியில் மஞ்சுவிரட்டுப் போட்டி

போடியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மஞ்சுவிரட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

போடி: போடியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மஞ்சுவிரட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள கரட்டுப்பட்டி, சூலப்புரம், மேலச்சொக்கநாதபுரம், சிலமலை, பொட்டிப்புரம், ராமகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாட்டுப் பொங்கல் விழாவையொட்டி விவசாயிகள் தங்கள் மாடுகளுக்கு அலங்காரம், பூஜைகள் செய்து வழிபாடு செய்தனா்.

பின்னா், மாடுகளை தங்கள் கிராமங்களுக்குள்ளேயே ஓடவிட்டு மஞ்சுவிரட்டுப் போட்டி நடத்தினா். இதில், இளைஞா்கள் திரளாக பங்கேற்றனா்.

மேலும், போடி ஜக்கமநாயக்கன்பட்டி, மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயா் கோயில்களில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து, கோயில் மாடுகள் ஊா்வலமாக அழைத்து வரப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

Dinamani
www.dinamani.com