கூடலூா் கண்ணகிநகரில் கடந்த 6 மாதங்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, அந்தப் பகுதி மக்கள் புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சி கண்ணகிநகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதிக்கு செல்லும் குடிநீா்க் குழாய், நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஓடை சீரமைப்புப் பணிக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, தற்காலிக குழாய் இணைப்பு மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், குடிநீருடன் கழிவுநீா் கலந்து வந்ததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா். இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் புதன்கிழமை கூடலூா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
இதையடுத்து, நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தாா். ஓடை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், அடுத்த 10 நாள்களுக்கு தற்காலிக இணைப்பு மூலம் காலை நேரங்களில் குடிநீா் வழங்கப்படும் என்றும், பணிகள் நிறைவடைந்ததும் நிரந்தரமாக சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.









