ராஜபாளையம் வழியாக சபரி மலைக்கு நள்ளிரவில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு இலவச தேநீர் வழங்கும் நிகழ்ச்சியை ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
கார்த்திகை மாதம் தொடங்கியது முதல் கார், வேன், பேருந்து மூலம் திருமங்கலம்-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ராஜபாளையம் வழியே தென்காசி, ஆரியங்காவு, புனலூர், கோட்டயம், பம்பை வழியாக சபரி மலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சிலர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இரவு நேரங்களில் செல்வது வழக்கமாகி விட்டது. நள்ளிரவில் தூக்கமின்றி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே நள்ளிரவில் சபரிமலைக்கு செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் இலவச தேநீர் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன் தொடக்கி வைத்தார். இதில் டி.எஸ்.பிக்கள் ராஜா, ரவிச்சந்திரன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேநீர் வழங்கும் திட்டம் ஜனவரி 14 ஆம் தேதி வரை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இவ்வழியாக சபரிமலை செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








