ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியையாக சௌ.மேரி மற்றும் ஆசிரியையாக சீ.அமுதா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்பள்ளியில் 20 ஏழை எளிய மாணவ மாணவியர் படித்து வருகிறார்கள். இவர்களின் பெற்றோர் ஆடு மேய்த்தல் மற்றும் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
தற்போது முழு முடக்கம் காரணமாக தங்களது வாழ்வாதரம் இழந்து மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இதுகுறித்து அறிந்த தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை தங்களது மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து சனிக்கிழமை ஒவ்வொரு மாணவ மாணவியரின் வீடு தேடிச் சென்று ரொக்கப் பணம் ரூ.1000 மற்றும் நோட்டுகள், பேனாக்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களை இலவசமாக வழங்கினர்.
தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியையின் இந்த சமூக அக்கறையான செயல் மற்றும் தங்களது பள்ளி மாணவ மாணவியரின் நலனில் காட்டும் அக்கறையை வட்டாரக் கல்வி அலுவலர் கி.சீனிவாசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி ஆகியோர் வெகுவாக பாராட்டினார்.