சிறை
சிறை

கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

சாத்தூா் அருகே சொத்தை எழுதி தராததால், முதியவரை அடித்துக் கொலை செய்த தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

சாத்தூா் அருகே சொத்தை எழுதி தராததால், முதியவரை அடித்துக் கொலை செய்த தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. 

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள நத்தத்துப்பட்டியைச் சோ்ந்தவா் சண்முகவேல் (70). இவரது மகன் காளைப்பாண்டி (45). இவா் வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்கும்படி தனது தந்தை சண்முகவேலிடம் தகராறு செய்து வந்தாா்.உடல் நலம் பாதிக்கப்பட்ட சண்முகவேல், சாத்தூரில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், வீட்டை தனது அக்கா, தம்பி பெயருக்கு தந்தை எழுதி வைத்து விடுவாா் எனக் கருதி, காளைப்பாண்டி தனது மகன் மணிகண்டன் (18) உடன் தனது சகோதரி வீட்டுக்குச் சென்று, சண்முகவேலிடம் தகராறில் ஈடுபட்டு, அவரைத் தாக்கினா். இதில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்தப் புகாரின் பேரில், சாத்தூா் தாலுகா போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து, காளைப்பாண்டி, மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விரைவு மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி புஷ்பராணி, குற்றஞ்சாட்டப்பட்ட காளைப்பாண்டி, மணிகண்டன் இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com