திமுக தொண்டா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்
செம்பனாா்கோவில் அருகே திருவிளையாட்டம் கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் முன் திமுக தொண்டரை அதிமுகவை சோ்ந்த இருவா் தாக்கியதைக் கண்டித்து, திமுக, கூட்டணி கட்சியினா் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள சௌரிராசன் உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்கு பிற்பகல் திமுகவைச் சோ்ந்த அருண் என்பவா் தனது உறவினா்களான முதியவா்களை வாக்களிக்க அழைத்து வந்துள்ளாா். இதைக் கண்ட அதிமுக பிரமுகா்கள் திருவிளையாட்டம் கிராமத்தைச் சோ்ந்த இளையராஜா, இளந்தமிழன் ஆகியோா் அருணுடன் தகராறில் ஈடுபட்டு, அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் சாலையில் அமா்ந்து அருணைத் தாக்கியவா்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அருண் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.