காரைக்கால் பகுதியில் இலவச அரிசியை தொகுதி மற்றும் வார்டு பாரபட்சம் பார்க்காமல் வழங்கவேண்டும் என பாஜக வலியுறுத்தியது.
காரைக்கால் தெற்குத் தொகுதி பாஜக செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தொகுதி தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். கூட்டத்தில் காரைக்காலில் நிலவும் பிரச்னைகள் குறித்தும், புதுச்சேரி அரசின் மெத்தனப்போக்குகள் குறித்தும் நிர்வாகிகள் பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: காரைக்காலில் பெய்த மழையினால் சாலையிலும், குடியிருப்பு நகர்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. சுகாதாரக் கேடு உருவாக இது காரணமாகிவிடாமல், நகராட்சி நிர்வாகம் தண்ணீரை அகற்ற விரைவான நடவடிக்கை எடுக்க
வேண்டும். காரைக்காலில் தரப்படும் 20 கிலோ இலவச அரிசி வழங்கலில் தொகுதிகள் மற்றும் வார்டுகள் பாரபட்சம் பார்க்கப்படுகிறது. அரசு நிர்வாகம் இந்தப் போக்கை கைவிட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதுச்சேரி அரசின் செயலற்றப்போக்கைக் கண்டித்து பாஜக நடத்தவுள்ள பாதயாத்திரையில் தெற்குத் தொகுதியிலிருந்து திரளானோர் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட பொதுச்செயலர் ஐயப்பன், மாநில மகளிர் அணி பொதுச்செயலர் நளினி கணேஷ்பாபு, மாவட்ட ஓபிசி அணி துணைத் தலைவர் ஜி.எம்.முத்துசாமி, சிறுபான்மைப் பிரிவு மாநில துணைத் தலைவர் சேவியர், விவசாய அணியை சேர்ந்த அய்யாசாமி, கூட்டுறவுப் பிரிவை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் தொகுதி நிர்வாகிகள் ராமு, கோவிந்தன், பிரபு, பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.