புதுச்சேரி ஆட்சியாளர்கள் காரைக்காலை தொடர்ந்து புறக்கணித்துவரும் நிலையில், மாநில அரசிடம் காரைக்கால் நிலை குறித்து புதுச்சேரி வரும் பிரதமர் வெள்ளை அறிக்கை கோரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் தனி யூனியன் பிரதேச கொள்கையுடன் தொடங்கப்பட்ட காரைக்கால் போராட்டக் குழு அமைப்பாளர் வழக்குரைஞர் எஸ்.பி.செல்வசண்முகம் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது :புதுச்சேரிக்கு பிரதமர் நரேந்திரமோடி வரும் 25-ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரவுள்ளார். தனித் தீவு போன்றிருக்கும் காரைக்கால் நிலை குறித்து பிரதமர் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என்பதே போராட்டக் குழுவின் கோரிக்கையாகும். எந்த காரணங்களால் தனி யூனியன் பிரதேசக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதோ தற்போது அந்தக் கோரிக்கைகள் மேலும் வலுப்பெற்றுள்ளன. காவிரி நீர் இறுதித் தீர்ப்பில்கூட புதுச்சேரிக்கான 7 டி.எம்.சி.யில் மாற்றம் இல்லை. ஆனால் இந்த தண்ணீரை தமிழகம்தான் தரவேண்டிய நிலையில், எந்தவொரு காலத்திலும் தண்ணீரை பெற தமிழக அரசிடம், புதுச்சேரி அமைச்சர், அலுவலர்கள் சென்று பேசியது கிடையாது. இந்த நிலையில், உறுதிப்படுத்தப்பட்ட 7 டி.எம்.சி.யை தமிழகம் எவ்வாறு தரும் ? புதுச்சேரி முதல்வர், காவிரி தீர்ப்பை வெற்றிக்கொண்டாட்டமாக கூறுவது ஏற்புடையது அல்ல. எனவே, புதுச்சேரி வரும் பிரதமர் நரேந்திரமோடி, மாநில அரசிடம் காரைக்கால் நிலை குறித்து வெள்ளை அறிக்கையை குறித்த காலக்கெடுவுக்குள் வழங்குமாறு கோரவேண்டும் என்பதே போராட்டக் குழு கோரிக்கையாகும் என்றார் அவர்.