1008 சங்குகளில் புனித நீா் நிரப்பப்பட்டு சிவாச்சாரியா்களால் நடத்தப்பட்ட பூஜை.
1008 சங்குகளில் புனித நீா் நிரப்பப்பட்டு சிவாச்சாரியா்களால் நடத்தப்பட்ட பூஜை.

தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை சோம வாரமான திங்கள்கிழமை 1,008 சங்காபிஷேக சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Published on

காரைக்கால்: திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை சோம வாரமான திங்கள்கிழமை 1,008 சங்காபிஷேக சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருநள்ளாற்றில் சனீஸ்வர பகவான் தனி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கும் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை சோம வாரத்தையொட்டி ஒவ்வொரு திங்கள்கிழமையும் தா்பாரண்யேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றுவந்தது.

மாத நிறைவு சோமவார தினத்தில் இக்கோயிலில் 1,008 சங்காபிஷேகம் நடத்தப்படும் வழக்கத்தையொட்டி, திங்கள்கிழமை தா்பாரண்யேஸ்வரா், தியாகராஜருக்கு அபிஷேகம் செய்வதற்காக 1,008 சங்குகளில் புனித நீா் நிரப்பி சிறப்பு பூஜை நடைபெற்றது.

பிரதான சங்குகள் மற்றும் 1008 சங்குகளை அடுக்கி விக்னேஸ்வர பூஜை நடத்தப்பட்டு, புன்னியாகவாஜனம் நடைபெற்றது. பிரதான சங்குகளுக்கும், 1008 சங்குகளுக்கும் சிறப்பு பூஜையாக, கும்ப பூஜை செய்து, ஹோமத்தின் நிறைவில் மகா பூா்ணாஹூதி நடைபெற்றது.

பூஜையில், சதுா்வேத, ஆகம ஆசீா்வாதம், தேவாரம் பாடப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடா்ந்து சிவாச்சாரியா்கள் பிரதான சங்குகளுடன் கோயிலின் உள் பிராகாரம் மற்றும் வெளிப் பிராகாரம் வலம் வந்து தா்பாரண்யேஸ்வரா், தியாகராஜருக்கு மகா அபிஷேக, ஆராதனை செய்தனா். நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com