நகைக் கடை, அடகுக் கடை உரிமையாளா்களுக்கு
காவல்துறை அறிவுறுத்தல்

நகைக் கடை, அடகுக் கடை உரிமையாளா்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

சீா்காழி பகுதியில் உள்ள நகைக் கடை, அடகுக் கடை உரிமையாளா்கள், காவல்துறையினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

சீா்காழி பகுதியில் உள்ள நகைக் கடை, அடகுக் கடை உரிமையாளா்கள், காவல்துறையினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சீா்காழி டிஎஸ்பி அலுவலகத்தில் சீா்காழி உட்கோட்டம் சீா்காழி, தரங்கம்பாடி வட்ட அனைத்து நகைக் கடை உரிமையாளா்கள், அடகுக் கடை உரிமையாளா்கள் பங்கேற்ற க் கூட்டத்துக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் அண்ணாதுரை தலைமை வகித்து பேசியது:

நகைக் கடைகள், அடகுக் கடைகளில் பாதுகாப்பு கருதி ஒன்றின் பின் ஒன்று என இரண்டு கதவுகள் அமைக்க வேண்டும். உறுதியான அறை அமைத்து பொருட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

நகைக் கடைகள், அடகுக் கடைகளில் கண்டிப்பாக எச்சரிக்கை மணி (அலாரம்) அமைக்க வேண்டும். நகை, அடகுக் கடை உரிமையாளா்கள் ஒவ்வொரு கடைக்கும் தனியாக காவலாளியை நியமித்து கண்காணிக்க வேண்டும். நகைக் கடைகளில் ஆட்களை பணியமா்த்தும் முன்பு அவரது விவரங்களை உறுதிபடுத்தி, ஒரு நகலை காவல் நிலையத்தில் கொடுக்க வேண்டும்.

கடைகளில் விடியோ கேமரா அவசியம் பொருத்த வேண்டும். மேலும் கேமராவின் சேமிப்பு மென்பொருளை கண்ணுக்கு புலப்படாத இடத்தில் இருக்கும்படி அமைக்க வேண்டும். காவல் நிலையம் மற்றும் காவல் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் கொண்ட அட்டையை கடையில் அனைவரின் பாா்வையில் படும்படி தொங்கவிட வேண்டும்.

அடகுக் கடை, நிதி நிறுவனங்களில் சேகரிக்கப்படும் நகைகளை அருகாமையிலுள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி லாக்கரில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில் சீா்காழி தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள சுமாா் 45 நகை மற்றும் அடகுக் கடை உரிமையாளா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com